நடிகர் சல்மான்கானும் கிரிக்கெட் வீரர் டோனியும் மிகவும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் விவசாயம் குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அது மட்டுமல்ல, அண்மையில் இருவரும் விவசாய நிலத்தில் உழவு செய்த புகைப்படம் ஒன்று இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தப் புகைப்படத்தில் டிராக்டர் ஓட்டிய பின்னர் சல்மான்கானும் டோனியும் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறார்கள். அதில், இவர்கள் இருவருடன் பாடகர் எபி தில்லானும் உள்ளார்.
மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள பன்வல் என்ற இடத்தில் சல்மானுக்கு ஐம்பது ஏக்கர் நிலம் உள்ளது. இங்குள்ள பண்ணை வீட்டுக்கு அடிக்கடி சென்று, தங்கி விவசாயப் பணிகளைக் கவனிப்பதுதான் சல்மானின் பொழுதுபோக்காம்.
டோனியை அங்குதான் அழைத்துச்சென்று விவசாய நுணுக்கங்களை அவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.
இதனிடையே, சல்மான்கான் நடிக்கும் புதுப் படம் ஒன்றில் இணைத் தயாரிப்பாளராக டோனியும் இணைவார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வெளியாகும் என்றும் அதன் ஓடிடி உரிமையையும் பெற டோனி விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள டோனி, இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

