அனைத்து வேடங்களிலும் நடிக்கத் தயார்: குரு சோமசுந்தரம்

அனைத்து வேடங்களிலும் நடிக்கத் தயார்: குரு சோமசுந்தரம்

2 mins read
7898f8bd-2758-42a8-8333-9da1d4bcef03
‘பாரிஸ் கஃபே’ படத்தில் ஒரு காட்சி. - படம்: விகடன்
Google News Preferred Icon

குணச்சித்திர வேடம், வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரம், கதாநாயகன் என எத்தகைய வேடமாக இருந்தாலும், கச்சிதமாகப் பொருந்திப்போகிறார் குரு சோமசுந்தரம்.

கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவுக்கு வந்து சாதித்துக்கொண்டிருப்பவர்களில் இவருக்குத் தனி இடம் உண்டு.

அண்மைய பேட்டியில் மனம் திறந்து பல விவரங்களைத் தெரிவித்துள்ளார் குரு.

‘ஜோக்கர்’, ‘மின்னல் முரளி’, ‘பாட்டில் ராதா’, ‘மை லார்ட்’ என குரு தேர்வு செய்து நடிக்கும் படங்களைப் போலவே அவரது கதாபாத்திரங்களும் தனித்துவமாக இருக்கும்.

தமிழ், மலையாளம் கடந்து இப்போது தெலுங்கிலும் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அசத்திவரும் குருவின் கைவசம் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் ‘டிராகன்’ உட்பட அரை டஜன் படங்கள் உள்ளன.

தமிழிலும் ‘பாரிஸ் கஃபே’, ‘டிமான்ட்டி காலனி 3’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

``நான் ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பது, யதார்த்தமாக நேர்ந்ததா அல்லது நானே வகுத்துக்கொண்ட பாதையா எனத் தெரியவில்லை. ஒரேவிதமான கதாபாத்திரங்களைச் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.

“கதாநாயகனாக நடித்துவிட்டதால், இனி நாயகனாக மட்டுமே திரையில் தோன்றுவேன் என்று சொல்வது சரியல்ல.

“ஒரு படத்தில் நாயகன், வில்லன் கதாபாத்திரங்களைத் தவிர, சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் வலுவாக இருந்தால், அதைக் குறித்தும் ரசிகர்கள் பேசுவார்கள். அப்படிப்பட்ட வேடங்களில் நடித்தால்தான் என் திறமை வெளிப்படும்.

“ஒரு காலத்தில் ரசிகர்களின் கவனம் முழுவதும் நாயகன், வில்லன், ஆகியோர் மீது குவிந்திருந்தது. இப்போது குணச்சித்திர வேடங்களில் நடிப்போரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

“நான் நாயகனாக நடிப்பதாக இருந்தால் ஒரு மொழியில்தான் அது சாத்தியமாகும். ஆனால் இப்போது அப்படி அல்ல.

அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறேன்,” என்கிறார் குரு சோமசுந்தரம்.

குறிப்புச் சொற்கள்