சர்ச்சைக்கு இடையிலும் ரூ.345 கோடி ஈட்டிய ‘பெத்தி’

சர்ச்சைக்கு இடையிலும் ரூ.345 கோடி ஈட்டிய ‘பெத்தி’

2 mins read
d33a12a8-eb78-4b26-bfe7-de182ec015e8
விளையாட்டை மையமாகக் கொண்ட ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ளார். - படம்: ‘பெத்தி’ படக்குழு

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் கடந்த 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளையாட்டை மையமாகக் கொண்டு பிரம்மாண்டப் பொருள்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். 

‘ரித்தி சினிமாஸ்’, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூரை கவர்ச்சியாகக் காட்சிப்படுத்தியிருப்பது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த இயக்குநர் புச்சி பாபு சனா, பெண்களை அவமதிக்கும் நோக்கத்தில் எந்தக் காட்சியும் எடுக்கப்படவில்லை என விளக்கம் அளித்ததுடன், யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், ‘பெத்தி’ திரைப்படம் வசூலிலும் தொடர்ந்து மிரட்டி வருகிறது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வரும் இப்படம், ஏழு நாள்களில் உலக அளவில் ரூ.345 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், விரைவில் அப்படம் ரூ.500 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. 

ராம் சரணின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘பெத்தி’ அமையும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்