தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மாளவிகா மோகனன், படப்பிடிப்புத் தளங்களில் தாம் எதிர்கொண்ட தனிமையின் வலி குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது கார்த்தியுடன் ‘சர்தார் 2’, விஜய் சேதுபதியுடன் ‘பாக்கெட் நாவல்’ எனப் பல முக்கியத் திரைப்படங்களில் பரபரப்பாக நடித்துவருகிறார் மாளவிகா. பிரபாஸ் ஜோடியாகத் தெலுங்கில் ‘தி ராஜா சாப்’ என்ற பெரிய பொருட்செலவில் உருவாகும் படத்திலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில், அண்மையில் தனது சமூக ஊடகப் பக்கம்வழி ரசிகர்களுடன் உரையாடிய அவர், கடந்த மாதம் (மார்ச்) சென்னையில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட மனச்சோர்வு குறித்துப் பேசினார்.
“நீண்ட காலமாக நமது வீட்டையும் அன்புக்குரியவர்களையும் பிரிந்து இருப்பது ஒரு கட்டத்தில் மிகுந்த தனிமை உணர்வைத் தரும்.
“நாள் முழுவதும் உழைத்துவிட்டு, உரையாடுவதற்குக்கூட துணையில்லாத ஒரு ஹோட்டல் அறைக்குத் திரும்புவது எனது மனத்தைப் பாதிக்கத் தொடங்கியது,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த உணர்வு குறித்துப் பகிர்ந்த அவர், “இது ஏதோ திரைப்படத்தில் வருவதுபோல் கதறி அழும் காட்சி அன்று; மிகவும் மௌனமான மற்றும் ஆழமான ஒரு வலி. நான் அப்போது அழவில்லை என்றாலும் ஒருவிதமான மனச்சோர்வுக்கு ஆளானேன்,” என்று தமது அனுபவத்தை உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
பளபளப்பான திரையுலக வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் இத்தகைய மனப்போராட்டங்கள் குறித்து அவர் பேசியிருப்பது தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

