என் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை: பாக்யஸ்ரீ

என் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை: பாக்யஸ்ரீ

3 mins read
456ca8ba-a9bd-4ae3-b188-61185602a5f5
பாக்யஸ்ரீ. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தென்னிந்திய திரையுலகில் இப்போது இளங்காற்று அதிகம் வீசுகிறது.

ஒருபக்கம் இளம் நாயகர்கள் வசூலில் சாதிக்கிறார்கள் எனில், மற்றொரு பக்கம் இளம் நாயகிகளின் கண்கொள்ளா அழகு பவனியைப் பார்க்க முடிகிறது.

இன்றைய தேதியில் இந்த அழகு தேவதைகளின் பட்டியலில் மிக எளிதில் இடம்பெற்றவர் என பாக்யஸ்ரீயைக் குறிப்பிடலாம்.

வழக்கம்போல் தெலுங்கு தேசத்தில் இருந்துதான் இவரும் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். தெலுங்கு மொழியை அடுத்து, இப்போது ‘காந்தா’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகி உள்ளார் இந்த இளம் நாயகி.

எனினும், படக்குழுவுக்கு இவரது நடிப்பின்மீது முழு நம்பிக்கை இல்லையாம். குறிப்பாக, நடிகர் ராணாவுக்கு இந்தச் சந்தேகம் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததாகச் சொல்கிறார்.

“சென்னையில்தான் இப்படத்தின் ஒப்பபனைக்கான சோதனை நடைபெற்றது. அவர் மனத்தில் என்ன நினைக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் இயக்குநர் செல்வாவிடம் மட்டும் விவரங்களைக் கேட்டுக் கொண்டேன். பிறகு நான் ஏற்று நடித்த குமாரி கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடையணிந்து, ஒப்பனையுடன் வந்து நின்ற பிறகுதான் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது,” என்று காந்தா படத்தில் தாம் ஒப்பந்தமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் பாக்யஸ்ரீ.

இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். வணிக மேலாண்மையில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், மாடலிங் துறையில் நுழைந்துள்ளார். சினிமா நடிகை ஆக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லையாம்.

ஆனால், விதிதான் வலியதாயிற்றே... கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்பே சில விளம்பர வாய்ப்புகள் தேடிவர, ஊரெங்கும் நன்கு அறிமுகமான பெண்ணாக மாறிப்போனார் பாக்யஸ்ரீ.

குறிப்பாக, ஒரு சாக்லெட் விளம்பரத்தில் இடம்பெற்ற இவரது ‘துருதுரு’ நடிப்பு இளையர்கள் மத்தியில் இவரைப் பரவலாகக் கொண்டுபோய் சேர்த்தது. அதன் பிறகு பாக்யஸ்ரீக்கு யோகம்தான். நண்பர்கள் பலரும் அவரை சினிமாவில் நடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் தனக்கும் சினிமா மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார் பாக்யஸ்ரீ.

“பெற்றோர் எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை. சினிமா, நடிப்பு எல்லாம் நமக்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து, எப்படியோ அனுமதி பெற்று நடிக்க வந்தேன்.

“எனினும் தொடக்கத்தில் சிறிய, கௌரவ வேடங்கள்தான் கிடைத்தன. ‘யாரியன்-2’, ‘சந்து சாம்பியன்’ ஆகிய இந்திப் படங்களில் தலைகாட்டி உள்ளேன். பின்னர் சன்னி தியோலுடன் ‘கதர்-2’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. நடிப்பு, ஒப்பனைத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அந்த வாய்ப்பு கைகூடி வரவில்லை.

“பிறகு ரவிதேஜாவின் ‘மிஸ்டர் பச்சன்’ படத்திற்காக நான் ஆடிய நடனம், பட விளம்பர நிகழ்வில் நான் ஆடிய நடனம் என வெளியீட்டுக்கு முன்பே எனக்குப் பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது,” எனத் தனது கனவு நனவானதை உற்சாகத்துடன் விவரிக்கிறார் பாக்யஸ்ரீ.

இதன் பிறகுதான், விஜய் தேவரகொண்டாவுடன் ‘கிங்டம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்ததாம். அது வெளியாகும் முன்பே தமிழ் அறிமுகத்திற்கு தயாராகிவிட்டார்.

துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள ‘காந்தா’ திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சமுத்திரக்கனி, ராணா, பிஜேஷ், ரவீந்திர விஜய் எனப் பலர் முக்கியமான பாத்திரங்களை ஏற்று இயல்பான நடிப்பிற்காகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

குமாரி கதாபாத்திரத்தில் கோபம், வஞ்சகம், அப்பாவித்தனம், சோகம், பயம் என அத்தனை உணர்வுகளையும் அடுத்தடுத்து வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளி உள்ளார் பாக்யஸ்ரீ.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்இயக்குநர்