விரைவில் அஜித்துடன் இணைவேன்: விஜய் சேதுபதி

விரைவில் அஜித்துடன் இணைவேன்: விஜய் சேதுபதி

3 mins read
16d6068b-9f43-4f8c-aae9-df9aa9009668
நடிகர் விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் சேதுபதி, “சென்ற முறை அஜித்துடன் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அதனை நான் தவற விட்டேன். இந்த முறை தவற விடமாட்டேன்,” என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

கடந்த ஆண்டு மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்தார் விஜய் சேதுபதி. ஜனவரியில் விஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் கூட்டணியில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் வெளியானது.

தொடர்ந்து விஜய் சேதுபதியின் 50வது படமாக ‘மகாராஜா’ வெளியாகி ஏறக்குறைய 180 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்திருந்தது. சீனாவிலும் இந்தப் படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் விஜய் சேதுபதி-வெற்றிமாறன் கூட்டணியில் ‘விடுதலை 2’ படம் வெளியானது.

இந்த மூன்று படங்களும் விஜய் சேதுபதிக்கு மிகச்சிறப்பான படங்களாக அமைந்த நிலையில் இந்த ஆண்டிலும் அவரது அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. அவற்றில் விஜய் சேதுபதி நடித்த ‘ஏஸ்’ விரைவில் வெளியாக இருக்கிறது.

அடுத்தடுத்து அவரது நடிப்பில் ‘ட்ரெயின்’, ‘காந்தி டாக்கீஸ்’ படங்களும் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. அவற்றின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

இதனிடையே முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியாவுடன் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்திருந்த ‘பிசாசு 2’ படமும் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது.

அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜுடனும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக நடந்த நிலையில், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தற்போது படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனனுடன் யோகிபாபு, செம்பன் வினோத், ஜோஸ், ரோஷினி ஹரிப்பிரியன் ஆகியோரும் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பு வெளியாகாத நிலையில் விரைவில் தலைப்பு, முதல் படம், முன்னோட்டக் காட்சி என அடுத்தடுத்து வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் முதல் முறையாக இணைந்துள்ளனர்.

இதனிடையே நடிகர் சூரியுடன் இணைந்து ‘கருடன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன் தற்போது விஜய் சேதுபதியுடன் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “அஜித்துடன் ஏற்கெனவே ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவருடன் நடிக்க முடியாமல் போனது.

“அவர் ஒரு சிறந்த நடிகரும் நல்ல மனிதரும்கூட. இதுவரைக்கும் நடந்த எதையும் நான் திட்டமிட்டு செய்ததில்லை. அதுபோல இனி வரும் நாள்களில் அவருடன் கட்டாயம் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று உருக்கமாகக் கூறியது தற்பொழுது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்