கோலிவுட்டின் அடுத்த நாயகியாக மமிதா பைஜு, கயாது லோஹர் இடையே கடும் போட்டி

கோலிவுட்டின் அடுத்த நாயகியாக மமிதா பைஜு, கயாது லோஹர் இடையே கடும் போட்டி

2 mins read
ed26b720-ee19-43ce-b899-165d9c3e00e3
கயாது லோஹர். - படம்: பின்டர்ரஸ்ட்
multi-img1 of 2
Google News Preferred Icon

தமிழ்த் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா போன்ற மூத்த நடிகைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில், கோலிவுட்டின் முன்னணி நாயகிகள் இடத்தைப் பிடிக்க இளம் நடிகைகளான மமிதா பைஜு, கயாது லோஹர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், முன்னணி நாயகன்களின் முதல் தேர்வாக இந்த இருவருமே மாறி மாறி வலம் வருகின்றனர்.

மமிதா பைஜு

மலையாளப் ‘பிரேமலு’ படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த மமிதா பைஜு, தமிழில் ‘ரெபல்’ மூலம் அறிமுகமாகி தற்போது ஆறு படங்களில் நடித்து வருகிறார்.

தனுஷுடன் இவர் நடித்த ‘கர’ படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்து சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (ஆகஸ்ட் 14 வெளியீடு), விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’, நிவின் பாலியுடன் மலையாளப் படம் என பரபரப்பாக நடித்து வருகிறார்.

குறிப்பாக, “ஜன நாயகன்’ படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை எனது மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்ததை ஒரு சிறந்த கற்றல் அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காதல், குடும்பக் கதைகளுக்குப் பொருத்தமான ‘பக்கத்து வீட்டுப் பெண்’ போன்ற தோற்றம் இவருக்குப் பெரும் பக்க பலமாக இருந்து வருகிறது.

கயாது லோஹர்

அசாம் அழகியான கயாது லோஹர், தமிழில் ‘டிராகன்’ படத்தின் மாபெரும் வெற்றி மூலம் கவனம் பெற்றார்.

தற்போது 7 பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்துள்ள இவர், மமிதாவுக்குப் போட்டியாகத் திகழ்ந்து வருகிறார். அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ (ஜூலை 10 வெளியீடு), ஜி.வி. பிரகாஷுடன் ‘இம்மார்ட்டல்’ (ஜூலை 22, 23 வெளியீடு) ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், அடுத்ததாக த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

நவீன தோற்றம், அதிரடி சண்டைக் கதைகளுக்குப் பொருந்தும் இவர், உண்மையான வாழ்க்கையிலும் துணிச்சலான பெண்ணாக விளங்குகிறார். தமது 16 வயதில் தன்னைக் கேலி கிண்டல் செய்த வாலிபனைப் பொறுமையிழந்து கல்லால் தாக்கிய சம்பவத்தை அண்மைய நேர்காணலில் அதிரடியாகப் பகிர்ந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இருவருமே தங்களின் தனித்துவமான நடிப்பு, பட வரிசைகளால் மிரட்டி வருவதால், கோலிவுட்டின் அடுத்த ‘யங் குயின்’ பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார் என்ற சுவாரசியம் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நடிகைநடிகர்போட்டிதனுஷ்