ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் குமார்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் குமார்

4 mins read
88348843-9ccd-45a8-af11-ac7741b7e0a0
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் அஜித் குமார். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வரும் அஜித் ரசிகர்களுக்கு தன் நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒருபக்கம் ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருக்க அஜித் கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகின்றார். கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் கார் பந்தயத்தில்தான் அஜித் கவனம் செலுத்தவுள்ளாராம். அந்த வகையில் தற்போது கார் பந்தயத்தில் மும்முரமாக இருக்கும் அஜித் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் விளையாட்டை பின்தொடர்கின்றனர். அதுவும் நான் நேசிக்கும் இந்த கார் பந்தயத்தை ரசிகர்களும் பின்தொடர்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என ‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அஜித் பேட்டி அளித்துள்ளார்.

தற்போது இணையத்தில் அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த காணொளியும் பரவி வருகின்றது. ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அவருக்கு இந்த ஆண்டில் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன.

கார் பந்தயத்தில் மூன்றாம் இடம்

நடிகர் அஜித்திற்கு சினிமாவைத் தாண்டி பிடித்த ஒரு விஷயம் கார் பந்தயம். இதுவரை பைக், கார் பந்தயங்களில் விபத்தில் சிக்கி இருக்கும் இவர் 13 அறுவை சிகிச்சைகளைக் கடந்து வந்திருக்கிறார். இருப்பினும் ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் தனக்குப் பிடித்த பொழுதுபோக்கு என கலக்கி வருகிறார் அஜித்.

அந்த வகையில் அவர் கடந்த மாதம் நடந்த துபாய் 24H கார்பந்தயத்தில் கலந்துகொண்டார். இதில் இவரது அணி இந்தியா சார்பில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றது. இது இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்ததாக பல அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவிட்டனர்.

இரண்டாவது பத்மபூஷன் விருது

நடிகர் அஜித்திற்கு இந்தியாவில் உயரிய விருதான பத்மபூஷன் விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சாதித்தவர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதை அஜித் முதன்முறையாக வாங்க இருக்கிறார்.

நடிகர் அஜித், கடந்த 15 ஆண்டுகளில் பெரும்பாலும் எந்த திரை பிரபலங்களின் திருமணங்களிலும் தான் நடித்த படங்களின் விளம்பர விழாக்களிலும் கலந்துகொண்டதில்லை. ஆனால், இந்த ஆண்டு அதற்கு சற்று மாறுபட்ட ஆண்டாக அமைந்தது. பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமணத்தில் அவர் கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்

அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து முதல் படம் ‘விடாமுயற்சி’ வெளியாகி உள்ளது. இரண்டாவது படம் ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படி ஒரே ஆண்டில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவது பல ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது.

நான்காவதாக தனித்து வெளியான படம்

வழக்கமாக அஜித்தின் படங்கள் வரும்போது அதனுடன் சேர்ந்து விஜய் படமும் வெளியாகும். அப்படி இல்லையென்றால் வேறு ஏதேனும் ஒரு முன்னணி நாயகியின் படமும் அவருடைய படத்திற்குப் போட்டியாக வெளியாகும். ஆனால் இம்முறை பொங்கலுக்கு வெளியாக வேண்டிய ‘விடாமுயற்சி’ படம் யாருடனும் போட்டி போடாமல் பிப்ரவரியில் வெளியானது. அடுத்து ‘குட் பேட் அட்லி’ திரைப்படமும் அதே போல ஏப்ரல் மாதம் போட்டியின்றி வெளியாக உள்ளது.

ஐந்தாவதாக பல ஆண்டுகளுக்குப் பிறகு நேர்காணல்

அஜித் மிகவும் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரியும். தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும்தான் கேமராவுக்கு முன்பு இருப்பார். தனது குடும்பத்துடன் இருக்கும்போதோ, தனிப்பட்ட வேலைகள் ஏதேனும் செய்யும்போதோ கேமராக்கள் தன் கண் முன் இருந்தால் கோபப்படுவார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேர்காணலில் பேட்டியளித்த இவர், அதன் பிறகு அண்மையில்தான் கார் பந்தயத்தின்போது சில தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுத்தார்.

அதில், “அஜித் வாழ்க விஜய் வாழ்க என கோஷம் போடுகிறீர்கள் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?” என்று அவரது ரசிகர்களையே அவர் பார்த்து கேள்வி கேட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நேர்காணலும் பரவலாக பகிரப்பட்டது. இது அஜித்துக்கு நல்ல விஷயமோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு நல்ல விஷயமாக அமைந்தது.

ஆறாவதாக விஜய்-அஜித் உரையாடல்

இப்போது வரை பலரும் விஜய்யையும் அஜித்தையும் போட்டி நடிகர்களாக கருதி வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவரும் நல்ல நட்புறவில் இருக்கின்றனர்.

அஜித் விருது வாங்கியபோது விஜய் எந்த வாழ்த்து செய்தியையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் மீது விஜய்க்கு பொறாமை என்றெல்லாம் கிளப்பி விட்டனர். ஆனால், இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “அஜித் கார் பந்தயத்தில் மூன்றாம் இடம் பெற்றபோதும், பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட போதும் முதல் ஆளாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தவர் விஜய்தான்,” என்று அவர் தெரிவித்தார். இதையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்