மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் புது வரவுகள்

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் புது வரவுகள்

2 mins read
e6049a5e-b2f5-483c-8c55-4813d0f91576
பிறந்த 17 நாள்களில் தாயுடன் இருக்கும் பெங்கொலின் குட்டி. - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்
Google News Preferred Icon

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் ஓர் அழகான ‘சுண்டா பெங்கொலின்’ குட்டி பிறந்திருக்கிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி பிறந்த இந்தப் புதுவரவால் காப்பகமே மகிழ்ச்சியில் உள்ளது!

இந்தக் குட்டியைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

இந்தக் குட்டியின் அப்பா பெயர் ‘ராடின்’, அம்மா பெயர் ‘கம்பி’. இவர்களைத் தவிர அங்கே மற்றொரு பெங்கொலினும் இருக்கிறது. அதுவும் விரைவில் ஒரு குட்டியைப் பெற்றெடுக்கப் போகிறது!

இந்தக் குட்டி தன் அம்மாவின் வாலில் ஏறி சவாரி செய்யும்! அனைத்து பெங்கொலின் குட்டிகளும் இப்படித்தான் தன் அம்மாவின் வாலைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாகச் சுற்றும். பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்!

குட்டிக்கும் அம்மாவுக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக, காப்பாளர்கள் அங்கு ரகசிய புகைப்படக் கருவியை வைத்து, தூரத்தில் இருந்தபடியே அவற்றைக் கவனித்து வருகிறார்கள்.

சுண்டா பெங்கொலின் விலங்குகள் உலகத்தில் அழிந்து வரும் அரிதான விலங்குகளில் ஒன்று. அதனால், அவற்றை நாம் பத்திரமாகப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

இந்தக் குட்டி பெங்கொலின் வருகிற ஏப்ரல் மாதம் உங்களைப் போன்ற குழந்தைகளைப் பார்ப்பதற்காக வெளியே வரப்போகிறது. அதுவரைக்கும் உங்களுக்கு அதைப் பார்க்க ஆசையாக இருந்தால், ‘நைட் சஃபாரி’ செல்லும் பாதையில் வைக்கப்பட்டுள்ள நேரலை கேமரா மூலமாக நீங்களும் உங்கள் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்!

மண்டாயில் சுட்டித்தனம் செய்யும் காப்பிபாரா குட்டி!

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் இரு காப்பிபாரா குட்டிகள் பிறந்தன.
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் இரு காப்பிபாரா குட்டிகள் பிறந்தன. - படங்கள்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்

உங்களுக்கு ‘காப்பிபாரா’ (Capybara) விலங்குகளைத் தெரியுமா? இவை தென் அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் சாதுவான விலங்குகள். கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் ஜனவரி 4ஆம் தேதி இரண்டு அழகான காப்பிபாரா குட்டிகள் பிறந்தன!

ஆனால், பிறந்த இரண்டு குட்டிகளில், பெண் குட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் அது சில வாரங்களிலேயே (ஜனவரி 27ஆம் தேதி) இறந்துவிட்டது. விலங்குகளின் உலகில், முதல்முறை அம்மாவாகும் விலங்குகளுக்குக் குட்டிகளைப் பராமரிப்பது சிலசமயம் கொஞ்சம் சிரமமான விஷயமாக இருக்கும். ஆனால், அதனுடன் கூடப் பிறந்த ஆண் குட்டி தற்பொழுது மிகவும் ஆரோக்கியமாகவும் சுட்டியாகவும் வளர்ந்து வருகிறது.

இந்தக் குட்டி தற்பொழுது நன்றாகச் சாப்பிட்டு, மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. பிறந்தபோது இருந்ததைவிட தற்பொழுது மூன்று மடங்கு எடை அதிகரித்து 4.4 கிலோ எடையுடன் கொழு கொழுவென்று இருக்கிறது!

எப்பொழுதும் தன் அம்மாவின் பின்னாலேயே சுற்றிக்கொண்டு, அம்மாவோடு மிகவும் நெருக்கமாக இருக்கிறதாம் இந்தக் குட்டி.

விலங்குகளைப் பராமரிக்கும் திரு அஸ்மி அம்ஸாவும் அவரது குழுவினரும், இப்போது அந்த அம்மாவையும் குட்டியையும் மிகவும் அன்பாகவும் பத்திரமாகவும் கவனித்து வருகிறார்கள்.

விரைவில் பொதுவெளிக்கு வரும் இந்தக் குட்டியை நீங்களும் கண்டுகளிக்கலாம். காத்திருப்போம்.

குறிப்புச் சொற்கள்