உலக வெற்றியாளரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

உலக வெற்றியாளரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

1 mins read
241e5a94-962c-4e3c-9084-848fbf073909
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டியில் நடப்பு உலக வெற்றியாளரான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இந்தியாவின் முதல் நிலை சதுரங்க வீரராக உயர்ந்துள்ளார் 18 வயது பிரக்ஞானந்தா.

நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் நான்காவது சுற்றில் நடப்பு உலக வெற்றியாளரான சீனாவின் டிங் லிரனை, பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய சதுரங்க வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் பிரக்ஞானந்தா.

‘லைவ் ரேட்டிங்’ புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகளும் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகளும்பெற்றுள்ளனர்.

ஆனந்த் பல ஆண்டுகளாக இந்திய சதுரங்க வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

அவருக்கு அடுத்ததாக நாடு முழுவதும் பல வீரர்கள் சதுரங்கத்தில் வென்றாலும் எவராலும் அவரை நெருங்க முடியவில்லை. கடந்த ஆண்டு 17 வயதான சதுரங்க வீரர் குகேஷ் முதலிடத்திற்கு வந்தாலும் நீடிக்கவில்லை.

உலகம் முழுவதும் கவனிக்கப்படும் வீரராக உருவெடுத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதோடு, பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

2023ஆம் ஆண்டில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டிய உலகின் இளைய சதுரங்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அத்துடன், ஆனந்துக்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

மேலும், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

குறிப்புச் சொற்கள்